என் கவிதைகள் - ஒப்பனை

                                            


அக்டோபர் 3, 2021

மாலையின் தந்திரமான பிடியில் 

கலைந்துவிட்டிருந்த அவன்

அள்ளிப் பொருத்திக்கொண்டு 

அவசரமாகத் தயாரானான்

எதிர்பாராத கணத்தில் பெற்றுக்கொண்ட அழைப்பிதழின் 

மாலை விருந்துக்கு

வெளிச்சத்தை விரட்டி வெளிச்சம் தந்துகொண்டிருந்த

கர்வமான தெருவிளக்குகளினூடாகப் பயணித்தான்

கடலை உதாசித்துக்கொண்ட ஆறுகள் பாதை தவறி

சாலைகளில் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டான்

துடுப்புகளைத் துளாவியெடுத்து

படகோட்டியாக மாறினான்

தண்ணீர் தத்தளிக்கும் கரையில்

படகை நங்கூரமிட்டு

வரண்ட கால்களுடன்

அழைப்புக்கான இடத்தை அடைந்தான்

'ஏன் வியர்த்திருக்கிறாய்?' என்ற கேள்வியுடன்

அவன் கைகளில் வந்தமர்ந்தது

அன்றைய மாலைக்கான 

அவன் பெயர் பொறித்த

முதல் மதுக்கோப்பை

மதுக்கோப்பைகளின் ஒற்றைக் கால்களை

இறுகப் பற்றிக்கொண்டவனின்

கண்களில் மின்னிக்கொண்டிருந்தன

கருத்து நீண்ட சாலைகள்

தெருவிளக்குகளின் வெளிச்சத்தில்.


    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

நெடும்பாதைகள், சிறுகதை - ஆவநாழி இதழ்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்