Posts

Showing posts from March, 2023

என் கவிதைகள் - சுழல்

Image
                                                 மார்ச் 3, 2023 ஒவ்வொரு குளிர்காலம் வருகையிலும் உறுதியாகச் சொல்கிறேன் இதுதான் கடைசி என ஒவ்வொரு முறை விடைபெறுகையிலும் சொல்கிறது குளிர்காலம் மீண்டும் சந்திப்போமென.         - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - கடவுள்

Image
                                                  மார்ச் 3, 2023 எங்கோ வரைகிறான் ஒரு பித்தன் என் கோட்டுச் சித்திரத்தை.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - குவியாடி

Image
                                                  மார்ச் 12, 2023 நெடுஞ்சாலைப் பயணத்து  வாகனம் தீண்டிய மானின் கண்களில் நிலைத்தன தொலைதூரத்து வயல்வெளிகள்.         - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - முள்

Image
                                                            மார்ச் 18, 2023 வனங்களில் சிலிர்த்தலைந்த மிருகமொன்றின் சதைத் துண்டம் அலங்காரமாய் வீற்றிருந்தது என் உணவுமேசையில் அதன் மினுமினுப்பில் மயங்கிக்கொண்டிருந்த வேளை என் காதுகளைத் துளைத்தன அந்த வார்த்தைகள் "வெம்மை குறையுமுன் தொடங்கிவிடு" என ஆவேசமாய் முள்கரண்டியைச் செலுத்தி கீறிடத்தொடங்கினேன் என் சதைகிழித்து என்னை நானே.         - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - உயரம்

Image
                                                                    மார்ச் 27, 2023  நானும் அவனும் ஒன்றாகப் பட்டம் விட்டுக்கொண்டிருந்தோம் அவனுடைய பட்டங்கள் கடலடி நீரின் விடுபட்ட குமிழிகளாய் முனைப்புடன் எம்பி மேகங்களை முகர்ந்தன என்னுடைய பட்டங்கள் அவசரமாய் சாலையைக் கடக்கும் சாரையாய் பக்கவாட்டில் நெளிந்து புவியின் ஈர்ப்பைப் பற்றிக்கொள்ள ஊடுருவின அவன் சொன்னான் பட்டம் விடுதலின் இரகசியத்தை "நன்றாக வான்நோக்கி அன்னாந்து பார்" என.     - பாலாஜி ராஜூ

கரூர் டைரீஸ், முன்பதிவு - 1

Image
                                                       கரூர், தமிழகத்தின் மையநிலம். நான் என்னுடைய 29வது வயது வரை கரூர் நகரை நீங்கியதில்லை. கல்லூரிப் படிப்பிற்காக ஐந்து வருடங்கள் திருச்சி நகருக்கு இரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன், பின் கரூரிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் வேலை, வெளியுலக அனுபவம் குறைவு, மேலும் ஆர்வமில்லை என்று சொன்னாலும் மிகையல்ல. கரூர் நகர் என்று இங்கு நான் குறிப்பிட்டாலும், என்னுடைய ஊர் கரூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் கிழக்கில் பன்னிரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் 'காளிபாளையம்' எனும் சிற்றூர். 30 வயது தொட்டதும் ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொண்டு கரூர் நகரை நீங்கி சென்னையில் நான்கு வருடங்கள் வசித்தேன். ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், நான் இதுவரை கரூர் நகரை வரைபடங்களிலோ, வழிகாடிகளிலோ பார்த்த நினைவே இல்லை. இந்தப் பதிவை எழுதுவதற்காக தேடுகையில் இதை உணர்ந்தேன். திசைகள் குறித்த பிரக்ஞை இல்லாமலேயே ஊரில் வாழ்ந்துகொண்டிருந்தவன், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டை விட்டே அகன்று மேற்குலகில் வாழ்ந்து வருகிறேன் என்பது விசித்தி

என் கவிதைகள் - ஒளி

Image
                                                  மார்ச் 12, 2023 தண்ணீரை வீசி வீசிக் கழுவிக்கொண்டிருந்தான் இளைய ஓட்டுநன் நேற்றைய இரவில் ஒளிர்ந்தடங்கிய பாம்பின் கண்களை.      - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - கருவி

Image
                                                       மார்ச் 11, 2023 நகர முற்றத்தில் புகைப்படநிலையத்தின் கதவுகளைத் திறந்து விடுவிக்கிறான் புகைப்படக்கலைஞன் நேற்றைய புன்னகைகளை கொத்தோடு அள்ளிக் கூட்டிவீசினான் போலிப் புன்னகைகளை தரையில் அப்பிக்கிடந்த புன்னகைக்காத உதடுகளின் இறுக்கப் பிசுபிசுப்புகளை நறுவிசாக வழித்தெடுத்தான் சுவற்றில் மாதிரிப்படத்தின் வசீகரச் சிரிப்பை ஒட்டடையாகத் தடவிக்கொண்டிருந்தது என்னுடைய புன்னகை ஒன்று.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - இன்மை

Image
                                                  மார்ச் 11, 2023 மனிதம் கூட்டமாய் தேவாலயங்களுக்குள் தொழுதுகொண்டிருந்தது தேவாலயங்கள்  சிலுவைகளை உயர்த்தி வான் நோக்கிக் கூவிக்கொண்டிருந்தன வான் நெடிந்து பரவி பிரபஞ்சத்திடம் விடை தேடிக்கொண்டிருந்தது பிரபஞ்சங்கள் வரிசையாய் முடிவிலிகளிடம் தம் கோரிக்கைகளை அடுக்கிக்கிடந்தன கடவுள்  இருண்ட கருவறைக்குள் புழுக்கத்துடன் புரண்டுகொண்டிருந்தான்.    - பாலாஜி ராஜூ

எனது கவிதைகள் - நிறம்

Image
                                                            மார்ச் 5, 2023 முட்டையுடைத்து காற்றை விழுங்கும் குட்டிப் பாம்பின் தடங்களில் அன்னையின் உயிர்க் கவிச்சி தண்ணீர் லாரியின் கொப்பளிப்பை விழுங்கிப் பெருமூச்சிடும் பெருநகர வீதிகள் வரண்ட ஆற்றுக்  குழிக்காயங்களின் ஊற்றுநீரைத் தானுண்ணும் மணல்பரப்புகள் பக்கவாட்டில் உறங்கும் குருட்டுப் பிச்சைக்காரன் கன்னத்தில் வழியும் வண்ணக் கனவுகளின் தூரிகைத் தெறிப்புகள் ஊறி ஊறித் தேங்கும் உமிழ்நீரின் எச்சில் நுரைகளில் கவிஞனின்  வியர்வைப் புளிப்பு.      - பாலாஜி ராஜூ