Posts

Showing posts from 2022

விசும்பு தொகுப்பு - வாசிப்பனுபவம்

Image
                                                              விசும்பு தொகுப்பின் கதைகளுக்கான தனிக் குறிப்புகள் கீழ்க்கண்ட கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியாகியுள்ளது. கட்டுரை எழுதப்பட்ட நாள்: டிசம்பர் 1, 2022. வெளியான நாள்: டிசம்பர் 28, 2022. விசும்பு – ஒரு வாசிப்பு தமிழில் அறிவியல் புனைக்கதைகளை சுஜாதா எனும் ராட்சஸ உருவத்தின் நிழல் படியாமல் எண்ணிப்பார்க்க இயலாது . இந்தக் குறிப்பை எழுதுவதற்காக சுஜாதாவின் சில அறிவியல் புனைக்கதைகளை இணையத்தில் மீள் வாசிப்பு செய்தேன் ( www.sirukathaigal.com ). முதல் சில கதைகளில் ஆச்சரியமும் பகடியுமாக நம்மை ஆக்ரமித்து மூன்று நான்கு ஐந்து ஆறாம் கதைகளில் ஒரு எழுத்தாளன் வாசகனுடன் நிகழ்த்தும் சுவாரசிய விளையாட்டாக மட்டுமே எஞ்சி சலிப்புணர்வை அளிக்கின்றன . அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் இந்திய மண்ணில் அமர்ந்திருப்பவை , அறிவியலின் மிகைச் சாத்தியங்களைக் கையாளு பவையாகவோ, அல்லது அறிவிய ல் உருவாக்கும் சூழலால் தீண்டப்பட்ட வையாகவோ உள்ளனர். அவர்களின் எதிர்வினைகளுக்கான பிண்ணனி மறுபுறம் சுரண்டப்பட்ட ஒரு அழகிய ஒற்றைப்பரிமாண பொம்மையாகவே காட்சியளிக்கிறது . சுஜாதாவின்

தூசி, சிறுகதை - கடிதம்

Image
                                                              வல்லினம் இணய இதழில் வெளிவந்த எழுத்தாளர் ரம்யாவின் சிறுகதை ' தூசி ' குறித்து ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம், ஆசிரியருக்கு, ‘தூசி‘ – எத்தனை பெரிய படிமம்! என்றும் நிலைத்திருக்கும் ஒன்று, ஒரு கட்டத்தில் எல்லாவற்றின்மேலும் படிந்து மூழ்கடிக்கக்கூடியது. ஆனாலும் சில அரிய மனிதர்கள் தம் செயல்கள்மூலம் இந்த இயற்கையின் நெறியை மீறும் ஆற்றலும், விடாயும் கொண்டிருக்கிறார்கள். மையப்புலத்தில் இல்லையென்றாலும் எங்கோ ஒரு புலப்படாத மெல்லிய சரடின் வழியாக மொழியின், பண்பாட்டின், கலைகளின் தொடர் இயக்கத்தை நம்மிடம் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சூழலை, அதன் உண்மையை, ஆளுமைகளை புனைவாக வாசிக்கையில் நம் அகம் எத்தனை உணர்வெழுச்சியை அடைகிறது என்பதற்கு மிகச் சிறந்த ஒரு சான்று இந்தச் சிறுகதை. அறம் கதைகளின் கதைமாந்தரை நினைவுறுத்தியது சுப்பிரமணியம் ஐயாவின் கதாப்பாத்திரம். கதையின் சில பகுதிகளை கண்ணீருடன் வாசித்தேன். பெரியசாமித் தூரனும், ஜெயமோகனும் சிந்தையில் உதிக்கிறார்கள். “நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்லமாட்டாங்களே ராமசாமி” என்று சுந்தர ராமசாமியிடம் கண

என் கவிதைகள் - கீதம்

Image
                                                              நவம்பர் 19, 2022 என்றோ உறைந்துவிட்ட கடிகாரத்தை உயிர்ப்பித்தான் முற்களை எதிர்காலமொன்றில் நிறுத்தினான் நாற்காலியில் சௌகர்யமாய் அமர்ந்துகொண்டு கேட்கத் தொடங்கினான் எதிர்திசையில் சுழன்று மௌனத்தை சீராக உடைக்கும் காலத்தின் மழலையை.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - நீலம்

Image
                                                         நவம்பர் 18, 2022 மிக அருகில் முச்சுவிடும் அறையொன்றில் அமர்ந்திருந்தான் ரோன் நகரின் நட்சத்திர இரவு சுவரில் நெளிந்துகொண்டிருந்தது உடலை விரும்புபவன் அதன் மீதான பரிசோதனைகளை வெறுக்கிறான் தேர்வுகளில் பிழைசெய்த மாணவனின் பரீட்சை முடிவுகளுக்கான காத்திருப்பாய் அவன் தத்தளிப்பு மனநலக் காப்பகம் நோக்கி மெல்ல நடக்கிறான் வின்சென்ட் வில்லியம் வான்கோ.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - நிறை

Image
                                                                நவம்பர் 13, 2022 குருட்டுப் பிச்சைக்காரன் நூறுரூபாய்த் தாளை தானே இட்டுக்கொள்கிறான் முதல்போனியாக , ஆழக் கிணற்றுக்குள் எறியப்பட்ட பொருட்களாய் சில்லறைக் காசுகளின் ஆரவாரம், காதுகளைப் பொத்திக்கொண்ட  கடவுள் மெல்ல விடுவிக்கிறான் கைகளை, வழிந்துகொண்டிருந்தது அட்சயப்பாத்திரம்.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - அந்தகாரம்

Image
                                                                   நவம்பர் 12, 2022 வேனிற்கால புலரி உறங்கிப் புரளும் குழந்தையின் அருகாமைத் தலகணையாய் நெகிழ்ந்தது குளிர்கால இரவு வீடற்ற குருட்டுப் பிச்சைக்காரனின் துப்பட்டியில் ஊடுருவி  கெக்கலிதது கவிஞன் உக்கிரமான மதியவெயிலில் தகிக்கும் சாளரமற்ற அறையில் வியர்வையுடன் மதுவருந்துகிறான் காகமொன்று காலமற்ற வெளியின் உச்சிக்கிளையில் அமர்ந்து அவலமாய்க் கரைந்தது.     - பாலாஜி ராஜூ

என் கவிதைகள் - சரடு

Image
                                                              நவம்பர் 6, 2022 மாபெரும் நூல்கண்டின் நுனியைச் சுமந்தலையும் முடிவுறா அசைவுகள் வளி தீண்டும் சிலந்திவலைக் கோடுகள் தீராக் கனவொன்றின் சரளைக்கல் சாலைகளில் சகடச் சப்தம்.    - பாலாஜி ராஜூ

கனவும் ஒரு இறப்புச் செய்தியும்

Image
                                      "Paramesh Anna Dead" என்ற செய்தியுடன் அலைபேசி ஒலித்து ஒளிர்ந்துகொண்டிருந்தது - அனுப்புநர் தம்பி அருள். விடிகாலை ஐந்தரை மணி என்ற எண்களின் பிண்ணனியிலிருந்த அந்தச் செய்தியை அலைபேசியின் முகப்பைத் திறக்காமலேயே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் ஒளி அடங்கி செய்தி மறைந்தது. அந்தச் செய்திக்கு முன் சில மணிநேரங்களாக உறக்கம் நீங்கிப் புரண்டுகொண்டுதானிருந்தேன். வழக்கமான ஒரு அன்றாடச் செய்தியையும் துக்கமான இந்தச் செய்தியையும் ஒரே தொனியில் அறிவிக்கும் அலைபேசியின்மேல் ஒரு வெறுப்பு எழுந்து அடங்கியது.  "ராஜூ, நாஞ்செத்தா ஒன்னு ஹார்ட் அட்டாக்கு இல்லன்னா எவனாவது என்னை அடிச்சுக் கொல்லுவான்". பரமேஸ் அண்ணன் சுவற்றில் ஒரு தலைகாணியை முதுக்குக் கொடுத்து, வயிறு முன்னோக்கிப் பிதுங்கிய நிலையில் அடர்த்தியாக மூச்சுவிட்டுக்கொண்டு உதடுகளில் ஒரு கசந்த சிரிப்புடன் சொன்னார். சிவப்புக் கோடுபோட்ட டீ-சர்ட் அவருடைய கனத்த வடிவத்துக்கு வினோதமாக நெகிழ்ந்துகொடுத்துக்கொண்டிருந்தது. நான் அளித்த ஊதா நிறக் கைலியினுள் ஒரு காலை மடக்கியும், மடித்த ஒரு காலின்மேல் வலது கையை

மனம் என்னும் பசித்த வனமிருகம்

Image
                                                              இன்னொரு திங்கட்கிழமையினுள் வெறுமையோடு என்னைச் செலுத்திக்கொண்டு கணினியைத் திறந்தேன். அமீர் தகவல் பரிமாற்றச் செயலியில் "இருக்கிறாயா?" என்றொரு செய்தியை அரைமணி முன்னரே அனுப்பியிருந்தது சற்று அசாதாரணமாக இருந்தது. தன் பதிமூன்று வயது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த வாரம் ஒருநாள் நோய்மைகான விடுப்பில் இருந்தான். நான் "ஆம் அமீர்" என்று செய்தியை அனுப்பிவிட்டு அவன் செய்திக்காகக் காத்திருந்தேன், பதிலில்லை. பின் இன்றைய நாளுக்கான முன் நிர்ணயிக்கப்பட்ட கூட்டு அழைப்புகளில் என்னை ஆட்படுத்திக்கொண்டிருந்தேன். அதில் ஒரு அழைப்பில் என் போலந்து மேலாளர் ஆர்கா "அமீர் இன்னும் சில நாட்கள் விடுப்பிலிருப்பான், அவனுடைய வேலையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்" என்று அறிவித்தார். தன் மகனுடைய ஆரம்பகால வருடங்களில் சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருந்ததென்றும், பாகிஸ்தானாக இருந்தால் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது என்றும் முன்பொருமுறை சொல்லிக்கொண்டிருந்தது நினைவிருந்தது. மனம் அமீரின் மகனின் உடல்நிலை குறித்த ஊகங்களில் தறிக

பேராசிரியரின் கிளி, சிறுகதை - சொல்வனம்

Image
                                                              சொல்வனம் இணைய இதழில் நண்பர் ஜெகதீஷ் குமாரின் ' பேராசிரியரின் கிளி ' எனும் கதை வெளிவந்துள்ளது. அவருக்கு கடிதமாக எழுதிய பகுதி இங்கு, அன்புள்ள ஜெகதீஷ், சிறுகதையை வாசித்துவிட்டேன், பிடித்திருந்தது. வியத்தகு திறன்கொண்ட ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான உறவில், அவர்களுக்கிடையே நிகழும் கூரிய உணர்வுப் பாய்ச்சல்களைக் கதை அலசியிருக்கிறது. ஸ்ருதி சாதனை உணர்வுகொண்ட ஒரு பெண்ணாக கதையை ஒட்டுமொத்தமாகத் தாங்கியிருக்கிறாள். அவளுடைய இயல்பு முதல் பத்தியிலேயே சொல்லப்படுகிறது. அவளுடைய கதாப்பாத்திரத்தை வாசகனாக என்னால் நன்றாக விரித்துக்கொள்ள முடிந்தது - இப்படிச் சொல்லலாம், மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. பேராசிரியருக்கும் ஸ்ருதிக்குமான கடந்தகால உறவின் ஒரு நிகழ்வு, அதுதரும் புழுக்கம் கதையில் அது வெளிப்படும்வரை நன்றாகக் கூடிக்கொண்டே இருந்தது.  இத்தனை சாதனை நிகழ்த்திய ஒரு பெண் தன் பேராசிரியரின் ஊக்கத்துக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறாள். அவளுடைய அக ஓட்டத்தில் 'நான் உன்னைவிடச் சாதித்துவிட்டவள்' என்ற ஒரு உணர்வு வெளிப்படுகிறது. அந்த அகந்தை