எனது சிறுகதை - கரிப்பு

                                                        

காராள கவுண்டரின் சாலையோர தோட்டக் கிணறு மறுபடியும் இரண்டு மலையாளிகளை உண்டு செரித்திருந்தது. கிணறு தரைமட்டத்திலிருந்து அறுபது அடி ஆழத்தில் இருபத்தைந்துக்கு நாற்பது என்ற அளவில் இருந்தது. காவிரியைத் தொட மாயனூர் செல்லும் அமராவதி ஆறு அவருடைய தோட்டத்திலிருந்து வடக்கில் இரயில் தண்டவாளத்தையும் மூன்று கிலோமீட்டர் தூர வயல்வெளிகளையும் தாண்டினால் வந்துவிடும். ஆனாலும் கிணற்றில் இருப்பதென்னவோ உப்புத்தண்ணீர்தான்.

காராள கவுண்டரின் நான்கு ஏக்கர் தோட்டம் இருபுறமும் புளியமரங்கள் அணிவகுக்கும் கரூர் திருச்சி மைய சாலை காளிபாளையம் தாண்டி ஆண்டிபாளையம் தொடும் இடத்தின் வளைவில் வடக்குப் பார்க்க இருந்தது. கிணறு தோட்டத்தின் சாலையை ஒட்டிய மேற்கு மூலையில் அமைந்திருந்தது. சூரியன் உச்சி தொடுகையில் சாலையோரப் புளியமரத்தின் நிழல் கிணற்றின் தண்ணீரில் தன் நிழலைப் பரவவிடும்.

புலியூர் சிமெண்ட் ஆலைக்கு லோடு எடுக்க வரும் மலையாளிகளுக்கு அவருடைய கிணறு குளிக்கவும் துணிதுவைக்கவும் ஏதுவானது. வயிற்று உபாதைகளுக்கு தோட்டத்தை ஒட்டிய சீற்றை முள்காடு உதவுகிறது. நாட்களாக பயணம் செய்து அழுக்கும் உடல் சூடுமாக வரும் லாரி ஓட்டுநர்களுக்கு உப்பென்ன இனிப்பென்ன? மாற்றுத் துணி, முகம் கக்கத்துக்கு பவுடர், துண்டு, தேங்காய் எண்ணெய், வி.கே.சி செருப்பு வீதமாக வருவார்கள். குளித்தவுடன் உடலில் வெண்மையாக பரவி அரிக்கும் உப்பை தேங்காய் எண்ணெய் தடவி சமாளித்துக்கொள்வார்கள்.


காராள கவுண்டர் தோட்டத்திலிருந்தால் எவரையும் கிணற்றை ஆணுக விடமாட்டார். “ஏண்டா, உங்குளுக்கு பொச்சுக் கழுவ ஏங்கிணறுதாங் கெடச்சுதா, வந்துட்டானுக புடுக்க ஆட்டிக்கிட்டு” என்று விரட்டுவார். உப்புத்தண்ணீர் என்றாலும் நான்கு ஏக்கர் நிலத்தில் மூன்று போகம் சோளம், புகையிலை, பருத்தி என்று விளைச்சலுக்கு கிணறும் உதவிக்கொண்டுதான் இருந்தது.


கிணற்றின் படிகள் தரை மட்டத்திலிருந்து பதினைந்து அடிகள் கீழறங்கும். படிகள் வடக்கில் ஐந்தாக இறங்கி வலதுபுறம் எட்டு படிகள் என நீண்டு இடது புறம் ஆறு படிகளாக மடங்கி நீரைத் தொடும். ஒவ்வொரு வரிப் படிக்கட்டுகள் தொடங்குகையிலும் சிமெண்ட்டால் ஆன சதுரமான சமதளம் இருக்கும். குளிக்க வருபவர்கள் அந்த சிறிய சமதளத்தில் இருந்துகொண்டு புழங்குவது வழக்கம். 


அந்த இரண்டு மலையாளிகளும் உச்சிப் பொழுதை ஒட்டிய பங்குனி மாத வெயிலில் கிணற்றுக்கு வந்தார்கள். காராள கவுண்டர் அன்று காலைதான் பருத்திச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியிருந்தார். கிணற்றில் தண்ணீர் தோட்டத்தின் பாய்ச்சலுக்கு போக கடைசி வரிப் படிக்கட்டுகளைத் தொட்டுக்கொண்டிருந்தது. படிகளில் நீர் ஊறித் தேங்கியதால் ஆங்காங்கே பச்சை நிறப் பூஞ்சை சற்று மட்டுப்படுத்தப்பட்ட மீன் கவுச்சியுடன் படர்ந்திருந்தது.


கிணற்றில் மூழ்கிய அந்த இரண்டு மலையாளிகளுக்கும் அன்று காராள கவுண்டரின் ஏச்சுப் பேச்சுகளை வாங்கித் திரும்பிவிடும் கொடுப்பினை இல்லை. கனமான எடைகொண்ட லாரியைச் செலுத்தப் பழகியவர்கள் உடலைத் தண்ணீருக்குள் செலுத்தும் கலையை தெரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். 


தண்ணீர் கீழே இருந்ததால் சமதளம் தாண்டிச் சென்று படிகளில் அமர்ந்து குளித்து துவைத்து திரும்பிவிடலாம் என்பது எண்ணம். குளிக்கச் சென்றவர்களில் முதலில் இறங்கியவன் கடைசி இரண்டு படிகளில் சற்று வழுக்கித் தடுமாறி நீருக்குள் விழுந்தான். என்ன நிகழ்கிறது என்று புரிவதற்குள்ளாகவே கிணற்றின் உப்பு நீரைக் கணிசமாகக் குடித்துவிட்டான். அது நுரையீரலுக்குள் சென்று இன்னும் மூச்சைக் கடினமாக்கியது. 


தண்ணீரில் மூழ்கித் தவிப்பவனை காப்பாற்றச் சென்ற இரண்டாமவன் அவசரத்தில் தன் கைகளை அவனுக்கு நீட்டிவிட்டான். உயிரின் தவிப்பில் இருந்தவன் நீட்டியவனையும் சேர்த்து தண்ணீருக்குள் இழுத்துவிட இருவரும் ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிக்கொண்டும் விடுபடப் போராடியும் சில நிமிடங்களுக்குள் வீட்டின் முகப்புக் கூரையைத் தொடும் பாலூன்களைப் போல கிணற்றின் அடிவண்டலைச் சென்று மெல்ல முட்டி நிலைத்தார்கள்.


*

        

காராள கவுண்டர் நீருக்கடியில் அதிகநேரம் மூச்சைப் பிடித்திருக்கும் முறையை சிறுவயதில் கிணற்றில் நீந்துகையில் விளையாட்டாக தொடங்கினார். சக நண்பர்களுடன் கிணற்றில் கல்லைப் போட்டு அது அடிப்பரப்பைத் தொடுவதற்குமுன் எடுத்து வருவது எனும் விளையாட்டில் தொடங்கிய பழக்கம் அது. எல்லோரையும் விட ஆழத்துக்கு செல்வதையும், அதிக நேரம் நீருக்கடியில் மூச்சைப் பிடித்து வைத்திருக்கும் திறனையும் அவர் வளர்த்துக்கொண்டார்.


காராள கவுண்டர் பால்யத்தில் கிணற்றுக்குள் தவறவிடப்பட்ட குடங்கள் பாத்திரங்கள் போன்ற பொருட்களை எடுத்துக்கொடுப்பதில் ஊர்க்காரர்களுக்கு உதவிகள் செய்தார். வயலுக்கு நீர் இரைக்க மோட்டார் தொழில்நுட்பம் வந்த பிறகு நீருக்கடியில் குழாயின் அடிபாகங்களில் உள்ள அடைப்புகளை எடுக்க அவருக்கு அருகாமையில் உள்ள லிங்கத்தூர் வெள்ளாளபட்டி போன்ற ஊர்களில் இருந்தும் அழைப்புகள் வந்தன. அவர் கிணற்றில் இருந்து மனித உடலை முதலில் எடுத்தது தவறி விழுந்து இறந்த ஊர்க்காரர் ஒருவரது ஐந்து வயது குழந்தையை.


காராள கவுண்டர் காளிபாளையத்துக்காரர். ஐம்பத்தி மூன்று வயது. ஐந்தரை அடி உயரமும் நரம்போடிய தேகமும் வாய்த்தவர். சிறுவயதிலிருந்து புசிக்கும் ஏருமைப் பாலும் தயிரும் உடல் குறைக்காக அவரை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்தது.


தன்னுடைய தகப்பனார் கருப்பண்ண கவுண்டரிடம் கற்றுக்கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லவேண்டிய அவசியத்தைக் குறைத்துவிட்டது. நான்காம் வகுப்பு வரை சென்றவர் ஐந்தாம் வகுப்பைத் தொடர்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தகப்பனாரும் ஒரே வாரிசான அவரை படிப்புக்காக வற்புறுத்தவில்லை. 


பதினெட்டு வயதில் மணவாடியைச் சார்ந்த பழனியம்மாளை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பெண்குழந்தைகளையும் கடைக்குட்டியாக ஒரு ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தார்கள். மூத்த பெண்ணை கொடுமுடியில் பால் வியாபாரிக்கும், இளைய பெண்ணை பாளையத்தில் சொந்தமாக தறித் தொழில் செய்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார்கள். மகனுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. கரூரில் நிதித் தோழில் செய்து வருகிறான். சொந்த ஊரிலேயே பெண்ணெடுத்து மனைவியோடு ஊரிலேயே வாசம். ஐந்து பேரக் குழந்தைகள்.


நான்கு ஏக்கர் நிலம் மூன்று எருமை மாடுகள் பத்து ஆட்டுக்குட்டிகள் ஒரு ஓட்டுவீடு என்பது அவருடைய உலகின் சுழற்சி.


காராள கவுண்டரின் கிணற்றில் மலையாளிகள் மூழ்கி இறப்பது இது மூன்றாவது முறை. முதல் இரண்டு முறைகளும் ஒற்றை உயிராக இருந்தது இந்தமுறை இரட்டைப் பலியாக உயர்ந்திருந்தது. சம்பவத்தன்று மூன்று மைல் தொலைவில் சனிக்கிழமை மாலையில் கூடும் புலியூர் மொடக்குச் சாலை ஆட்டுச் சந்தைக்கு இரண்டு வெள்ளாடுகளை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார். கிணறு இரண்டு உயிர்களைத் தனதாக்கிக்கொண்டுவிட்டது. 


கவுண்டர் சில மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டுச் சந்தைக்கு செல்வார். ஆடுகளை விற்றுவிட்டு கோவில் பாளையம் ஆற்று வாய்க்காலுக்குப் போய் மங்களத்தார் தோட்டத்தில் முகம் சுளிக்க மூன்று கோப்பை சாராயம் குடித்து சுடச்சுட இட்லியும் தேங்காய் வரமிளகாய் போட்டு வறுத்த வாத்துக் கறியும் வாழையிலைக் கருமை தெரிய வழித்துத் தின்றுவிட்டு ஊரடங்குகையில் வருவது அவர் வழக்கம்.


மாயனூர் காவல் நிலையத்துக்கு செய்தி போவதற்குள் சந்தையில் இருந்தவருக்கு நிலமை தெரிவிக்கப்பட்டது. வெள்ளாடுகளோடு திரும்பியவர் கிணற்றை நோக்கி விரைந்தார். ஆடுகளையும் விற்காமல் சாராயம் அருந்தி வாத்துக் கறி திங்கவும் வாய்ப்பில்லாமல் திரும்பியதில் அவருக்கு ஏமாற்றம். அதற்குள் ஊர் மக்களும் சாலையில் செல்பவர்களும் கூடி கிணற்றைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அவர் வருவதற்கு முன்னரே அறுபதடி கிணற்றில் மோட்டாரின் அடிப்பாகம் தொடும்வரை தண்ணீரை வெளியேற்றியிருந்தனர். 


இருபதடியாக இருந்த கிணற்று நீருக்குள் உடல்கள் ஏதும் பார்வைக்கு கிட்டவில்லை. கரிய பச்சை நிறத்தில் இருந்த கிணற்று நீர் தனக்குள் இருந்தவற்றை காண்பிக்க மறுத்தது. காராள கவுண்டர் செருப்புகளை கழற்றிவிட்டு படிகளில் நிதானமாகச் சென்று நீருக்குள் மெல்ல இறங்கினார். நீருக்கு வெளியே தவளையப் போல தலையை நீட்டிக்கொண்டவர் ஒரு ஆழமான மூச்சை இழுத்துக்கொண்டு மறைந்தார்.


முதல் இருமுறை முப்பது நொடிகளுக்குள் நீரின் மேல்தளத்தை அடைந்து நுரையீரலில் சுவாசத்தை சேர்த்துக்கொண்டு மறைந்தார். மூன்றாவது முறை ஐம்பது நொடிகள் கழித்து மேல் வந்தவர் ஒரு உடலைக் கண்டுகொண்டதாக கூறினார். மீண்டும் மறைந்து மூழ்கியவனின் தலைமுடியைப் பற்றிக்கொண்டு மேல் வந்தார். ஊர் மக்களில் சிலர் வீங்கத் தொடங்கியிருந்த பிணத்தை கயிற்றுக் கட்டிலில் மேலேற்றினார்கள். கிணற்றடி சேற்றின் பிடியில் இருந்த இரண்டாமாவனை சில நிமிடப் போராட்டத்துக்கு பிறகு மேல்தளத்திற்கு எடுத்துவந்தார்.


ஒருவனுக்கு முப்பது வயதிருக்கலாம், ஏனோ ஆழந்த உறக்கத்தில் இருந்தவனைப் போல முகத் தோற்றம் இருந்தது. கடைசியாக கண்டெடுக்கப்பட்டவன் இன்னும் இளைஞன், ஒடுங்கிய தேகம், சற்று கோணலான முகம். தண்ணீரில் மூழுகுபவர்களை உடலின் எந்த பாகத்தையும் பிடிக்காகமல் தலைமுடியைப் பிடித்து மீட்கவேண்டும் என்பது காராள கவுண்டர் கற்றுக்கொண்ட பாடம். மூழ்கி மடிந்தவர்களையும் தலை முடியைக் கொண்டே எடுத்துவரவேண்டும், உடல்பாகங்களைப் பிடித்தால் தண்ணீரில் ஊறி கைகளில் இருந்து வழுக்கிவிடும்.


மாயனூர் காவல் நிலையத்தின் வண்டி ஒரு மணி நேரம் கழித்தே வந்தது. அவர்கள் களத்துக்கு வந்து நிலமை புரிந்து ஆழ்நீச்சல் அறிந்தவர்களைத் தேடி அடைந்து அழைத்து வருவதற்குள் நேரம் கடந்துவிடும், தேவையில்லாத உளைச்சல். அவர்களது வேலையை காராள கவுண்டர் எளிதாக்கிவிட்டார்.


“என்ன கவுண்டரே மறுபடியும் நடந்துபோச்சா” என்று கேட்டுவிட்டு ஆய்வாளர் பிணங்களைப் பதிவு செய்து அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். அடுத்த அரை மணிக்குள் கரூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரைவூர்தியில் வந்து இரு பிணங்களையும் தூக்கியில் கிடத்தி எடுத்துச் சென்றார்கள்.


"கவுண்டரே கெணத்துக்கு ஒரு முள்வேலி போட்டு வெக்கக்கூடாதா?” என்றார் காவல்துறை ஆய்வாளர். 


“முள்வேலி போட்டா நாங்க எப்படிங்க உள்ள போரது வாரது?” என்று சற்று எரிச்சலுடன் பதில் கூறினார் கவுண்டர்.


*


"மாமா கெணத்துக்கு ஒரு பூசய செஞ்சுருங்க, ஒரே சிக்கலா வருதே" என்றார் ஊர்த் தலைவர் பரமசிவன்.


தென்னிலை நாட்ராயன் கோவில் பூசாரியை அழைத்து கிணற்றுக்கு பூசை செய்தார் கவுண்டர். காடா மீசையும் மேல் ஆங்கி இல்லாத நொடிந்த வெற்று உடலுமாக சைக்கிளில் வந்தார் பூசாரி ரத்தினம். கிணற்றுக்கு எதிரில் இருந்த புளிய மரத்தைச் சுற்றிக்காட்டி, “இந்த மரத்தாளாதாங்க பிரச்சன, அப்பப்ப இது கெணத்துல ஏறிக்கிது” என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு ஆணியடித்து உள்ளங்கையளவு கறுப்பு வட்டம் ஒன்றை இட்டார்.


கிணற்றின் நான்கு மூலைகளிலும் எழுமிச்சைப் பழங்களை வெட்டி குங்குமம் தடவி எறிந்தார். சேவல் ஒன்றை அறுத்து கழுத்து இரத்தத்தையும் கிணற்றைச் சுற்றி தெறிக்கவிட்டார். நூற்றியோரு ருபாய் கட்டணம் வாங்கி இடுப்பு வேஷ்டியில் முடிந்துகொண்டு சைக்கிளைக் கிளப்பினார். 


*

        

'ஆபத்தான கிணறு யாரும் இறங்கவேண்டாம்' என்று வைத்த பதாகையோ பூசாரியின் கைங்கர்யமோ. அடுத்த பதினைந்து வருடங்களில் கிணறு தன்னிடம் வருபவர்களிடம் கருணையுடனேயே இருந்தது.


கவுண்டரின் தோட்டத்தை புலியூர் சிமெண்ட் ஆலைக்காரகள் கணிசமான விலைக்கு கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சாலையை ஒட்டி இருந்ததால் தோட்டத்திற்கு நல்ல மவுசு இருந்தது. இரு மகள்களும் மகனும் தொடர்ந்து விற்கச் சொல்லி உந்திக்கொண்டே இருந்தார்கள். அரை மனதுடன் நான்கு ஏக்கரையும் சிமெண்ட் ஆலைக்கே விற்றுவிட்டார்.


தற்போது காராள கவுண்டர் தோட்டம் விற்ற பணத்தைப் பிரித்துக்கொடுத்துவிட்டு தன் பங்காக பிள்ளைகள் அளித்த சொற்பத்தை கீழ்சாதித் தெருக்களில் கந்து வட்டிக்கு விட்டுவிட்டு வசூலுக்காக சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அலைகிறார். கிணற்றில் இறங்குவதற்காக அவருக்கு வரும் அழைப்புகளும் நின்றுவிட்டன.


அரசாங்கம் கிணற்றை ஒட்டிய புளிய மரத்தை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி அப்புறப்படுத்திவிட்டது.


தோட்டத்தை வாங்கிய ஆலைக்காரர்கள் அங்கு ஒரு பிரம்மாண்ட லாரி செட்டை அமைத்திருக்கிறார்கள். கிணறு இருந்த இடத்தில் இப்போது பிளாஸ்டிக் ஓடு போட்ட நான்கு குளியல் அறைகளும் கழிவறையும் அடங்கிய கட்டிடம் உள்ளது. ஆலைக்கு லோடு எடுக்க வரும் மலையாளிகளுக்கு கிணறுகளை நோக்கிச் செல்லும் ஆபத்துகளும் இல்லை.


ஆனால் கிணறு இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட குளியல் அறைகளில் வரும் தண்ணீர் என்னவோ இன்னும் உப்புத்தண்ணீர்தான்.


                            ------------

Comments

  1. வாழ்த்துக்கள் பாலாஜி. நல்ல வடிவாகச் சிறுகதை வந்துள்ளது. கூர்மையான கொம்புகளும் சிறு முகடு என இருக்கும் திமிலும் யாருக்கும் அடங்காத ஒரு காளையை தன் தோட்டத்தில் வைத்திருக்கும் ஒருவரைப் போல காராள கவுண்டர் அந்த கிணற்றை தன் தோட்டத்தில் வைத்திருப்பதாகவே பார்க்கிறேன். அது அவருக்கு மட்டுமே அடங்கக் கூடியதாக இருக்கிறது. அதிலிருந்து அவர் ஊரில் உள்ள மற்ற ஆழ்கிணறுகளையும் தன வசப்படுத்துகிறார். கல், பாத்திரம், சடலம் என் ஏதோ ஒன்றை ஆழத்துக்குள் சென்று கண்டுபிடிக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார். அதில் அவருக்கு வெளிக்காட்டமுடியாத ஒரு பெருமையும், அக்கிணறு அவரின் அடையாளமாகவும் இருக்கிறது.

    உள்ளூர்க்காரர்கள் அதன் குணம் தெரிந்து யாரும் அதனிடம் சிக்குவதில்லை. தன ஊரில் எங்கும் வண்ணமயமாகப் படர்ந்திருக்கும் பாசியை அறிந்திருக்கும் வெகுளியான மலையாளிகளை உள்ளிழுக்கத்திற்காகவே அது பாசியைப் படரவிட்டுக் காத்திருக்கிறது என்பதாகவே நான் பார்க்கிறேன்.

    கிணற்றை மூடிவிட்டு குளியலறையை அமைத்திருக்கிறார்கள். தோட்டத்தை விற்றுவிட்டு காராள கவுண்டர் கந்துவட்டியில் ஈடுபட்டு இப்போது ஆட்களைக் கண்டுபிடிக்க அலைகிறார். காராள கவுண்டரும், கிணறும் வேறு ஒன்றாக மாறிவிடுகிறார்கள். ஒரு முறை நாக்கில் பட்டு உள்ளத்தில் தங்கிவிடும் கரிப்பு போல அவர்களின் குணம் அப்படியே இருக்கிறது.

    சிறுகதையின் முதல் வரியையும் முடிவில் இருக்கும் வரியையும் இணைத்தால் கதையின் சாராம்சம் வந்துவிடுகிறது.

    "வாழையிலை கருமை தெரிய வழித்துத் தின்றுவிட்டு ஊரடங்கையில் வருவது" என்ற வரி கவிஞர்களுக்கு உரியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மேசன்களின் உலகம் - கவிஞர் வேணு தயாநிதி

என் கவிதைகள் - வடிவம்