உறைபனியின் கனவு - கவிதை
சாதாரண நாள் – சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
ஜனவரி 31, 2026
உறைநீர் ஏரியின்
பொத்தலில்
தூண்டில் அமிழ்த்திய
மீனவக் கிழவன்
கனவு காத்தான்
குளிர் அங்கியினுள்,
நிலைத்த வெளியை
குறுக்கு வெட்டிக்
கீறியது
சிறகு படபடத்த
பறவை ஒன்று,
ஏரிக்கரை பாலத்தின்
பனி விரவிய
தண்டவாளத்தில்
வெம்மூச்சுடன் சீறியது
இரயில் வண்டி ஒன்று,
அக்கணம்
சுண்டி அடங்கியது
தூண்டில்
ஒரு முறை
ஒரே
ஒரு முறை
கிழவனின்
கனவு கலைத்து.

Comments
Post a Comment