உறைபனியின் கனவு - கவிதை
உறைநீர் ஏரியின்
பொத்தலில்
தூண்டில் அமிழ்த்திய
மீனவக் கிழவன்
கனவு காத்தான்
குளிர் அங்கியினுள்,
நிலைத்த வெளியை
குறுக்கு வெட்டிக்
கீறியது
சிறகு படபடத்த
பறவை ஒன்று,
ஏரிக்கரை பாலத்தின்
பனி விரவிய
தண்டவாளத்தில்
வெம்மூச்சுடன் சீறியது
இரயில் வண்டி ஒன்று,
அக்கணம்
சுண்டி அடங்கியது
தூண்டில்
ஒரு முறை
ஒரே
ஒரு முறை
மீனவக் கிழவனின்
கனவு கலைத்து.

Comments
Post a Comment