முற்று - கவிதை
செப்டம்பர் 12, 2025
நாங்கள் காத்திருந்தோம்
ஒரு பெரிய
கட்டிடத்தினுள்,
சிலர் சிலருக்காக
சிலர் சிலதுக்காக
சிலர் எதற்காகவோ
எங்கள்
எல்லோருக்கும்
இருந்தன
காரணங்கள்,
கட்டிடம் காத்திருந்தது
அதனுள்
கடிகாரம் காத்திருந்தது
சாளரங்கள் காத்திருந்தன
மேஜைகள் நாற்காலிகள்
தேநீர் கோப்பைகள்
மதுக் குவளைகள்
எல்லாமும்,
எங்களுடைய
காத்திருப்புத் தருணங்கள்
கூடின,
அவை
ஊரின் காத்திருப்பாயின
பிறகு
நகரத்தின்
தேசத்தின்
கண்டங்களின்
பூமியின்
காத்திருப்பாகியது,
பிரபஞ்சமும்
காத்திருந்தது,
நான்
என் காத்திருப்பு
முடிவுற்று
நீங்குகிறேன்
கட்டிடத்தை விட்டு.
- பாலாஜி ராஜூ

Comments
Post a Comment