கோதுமை மணி, மலர்விழி மணியம் - வல்லினம் இதழ்
ஒரு சிறுகதையில் உச்ச நிகழ்வின் காரணத்தை முதல் பத்தியிலிருந்து தொடங்கி கதை முழுக்க நகர்த்துவது, உறுத்தாத வட்டார வழக்கு, கதையின் களமான நெய்தல் நிலம் அளிக்கும் காட்சிக் கூர்மை, கதையின் இரண்டு மையக் கதாப்பாத்திரங்களின் தனித்தன்மை, பைபிளின் ஒரு கூறு என எல்லாம் ஒரே புள்ளியில் முயங்கி தீர்க்கமான படைப்பாக மாறுவது அரிய நிகழ்வு. படைப்பாளியின் திறனை வியந்தாலும், இவையெல்லாம் ஒன்று கூட தற்செயலின் தவிர்க்கமுடியாத பங்கு ஒன்றும் இருக்கிறது.
இவையெல்லாமும் கூடிய ஒரு சிறுகதையை சமீபத்தில் வாசித்தேன். வல்லினம் இதழில் வெளிவந்த மலர்விழி மணியம் எழுதிய 'கோதுமை மணி' சிறுகதை அத்ததையது. கதை குறித்த பார்வையை விஷ்ணுபுரம் குழுவில் பகிர்ந்தேன்.
"அப்பழுக்கற்ற அன்பு, தாய்மை எனும் அடிப்படை உணர்வு, எதையும் எதிர்பாராத தியாகம் ஆகிய மானுடத்தின் அரிய அம்சங்களை கடலோர கிராமமான முட்டத்தின் பின்ணணியில் சிறுகதை ஆழமாக மனதில் விதைக்கிறது.
கதையின் மையப் பாத்திரமான லூர்தம்மாளின் தாய்மை எப்படிப்பட்டது? அது அவளுடைய மகன் சிமோனுக்கான ஒன்று மட்டுமல்ல, கிராமத்தின் அனைத்து மனிதர்களுக்குமானது. இங்கு தாய்மை எனும் பண்பு அதன் அத்தனை சாத்தியங்களிலும் தன்னை நிறைத்துக்கொள்கிறது. மகனுடைய வருகை மீதான அவளுடைய நம்பிக்கை அவளுடைய இயல்பின் முழுத் தூய்மையில் இருந்து உருவான ஒன்று. கதையின் முடிவில் லூர்தம்மாளின் உரையாடல் ஒரு உச்சம்.
சிறுகதைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே நாம் நினைவுமீட்பு செய்கிறோம். லூர்தம்மாள் அந்த வகையில் வாசகர்களின் மனதில் அகலாமல் நின்றுவிடும் ஒரு பாத்திரம்.
கதை அதன் முடிவை நோக்கி நகர்ந்து சிறு துயரத்தை மனதில் உருவாக்குகிறது. அந்த தனிப்பட்ட துயரம் தியாகத்துக்கான பிம்பமாக பரிணாமம் அடைகையில் பிரமிப்பாக மாறுகிறது.
'கோதுமை மணி' எனும் தலைப்பு வசீகரமான ஒன்று. நான் சமீபத்தில் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என உறுதியாகச் சொல்வேன்."
Comments
Post a Comment