Posts

Showing posts from January, 2024

கரிப்பு - சிறுகதை

Image
                                                                      காராள கவுண்டரின் சாலையோர தோட்டக் கிணறு மறுபடியும் இரண்டு மலையாளிகளை உண்டு செரித்திருந்தது. கிணறு தரைமட்டத்திலிருந்து அறுபது அடி ஆழத்தில் இருபத்தைந்துக்கு நாற்பது என்ற அளவில் இருந்தது. காவிரியைத் தொட மாயனூர் செல்லும் அமராவதி ஆறு அவருடைய தோட்டத்திலிருந்து வடக்கில் இரயில் தண்டவாளத்தையும் மூன்று கிலோமீட்டர் தூர வயல்வெளிகளையும் தாண்டினால் வந்துவிடும். ஆனாலும் கிணற்றில் இருப்பதென்னவோ உப்புத்தண்ணீர்தான். காராள கவுண்டரின் நான்கு ஏக்கர் தோட்டம் இருபுறமும் புளியமரங்கள் அணிவகுக்கும் கரூர் திருச்சி மைய சாலை காளிபாளையம் தாண்டி ஆண்டிபாளையம் தொடும் இடத்தின் வளைவில் வடக்குப் பார்க்க இருந்தது. கிணறு தோட்டத்தின் சாலையை ஒட்டிய மேற்கு மூலையில் அமைந்திருந்தது. சூரியன் உச்சி தொடுகையில் சாலையோரப் புளியமரத்தின் நிழல் கிணற்றின் தண்ணீரில் தன் நிழலைப் பரவவிடும். புலியூர் சிமெண்ட் ஆலைக்கு லோடு எடுக்க வரும் மலையாளிகளுக்கு அவருடைய கிணறு குளிக்கவும் துணிதுவைக்கவும் ஏதுவானது. வயிற்று உபாதைகளுக்கு தோட்டத்தை ஒட்டிய சீற்றை முள்காடு உதவுகிறது. நாட்களாக

மானசீக கவிக்கு ஒரு தனிப்பட்ட கடிதம்

Image
                                                       கவிஞர் அபியின் கவிதைகள் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படி விளக்குவது என்று எனக்கு பிடிபட்டதில்லை. ஜெயமோகன் 'மீபொருண்மை' என்ற  வார்த்தையை அபியின் கவிதைகளைக் குறிக்க பயன்படுத்துகிறார். நாம் விளக்க இயலாமல் தவிக்கும் ஒரு நிலையை ஒற்றைக் கலைச்சொல் செய்துவிடுகிறது. நேற்று அபயின் மாலை கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய உந்துதலில் உணர்ச்சிவசப்பட்டு கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினேன்.  சில மணிநேரங்கள் கழித்து இதை அனுப்பியிருக்கவேண்டாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இதை அனுபபுகையில் நான் அடைந்த உச்சமே இதை அனுப்பத்தூண்டியது. இதுபோனற உணர்வுப் பீடிப்புகளுக்கு ஆட்படுவது அரிதான ஒன்று என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்தேன். ஒரு தயக்கத்தோடுதான் இதையும் இங்கு பதிவு செய்கிறேன்.  அன்புள்ள அபி சார், இது பாலாஜி ராஜு. என்னை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீண்ட நாட்கள் கழித்து உங்களுடைய மாலை கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். அந்த உந்துதலில் இதைப் பகிர்கிறேன்.  இந்த கவிதைகளை வாசித்த சூழலை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இ

வாசக சாலை, தினவு இதழ் - மதார் கவிதைகள்

Image
                                                              அன்புள்ள மதார், இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்து சற்று ஏமாற்றத்தில் இருந்தேன். சுகுமாரன் கவிதைகள் மொத்த தொகுப்பு (காலச்சுவடு வெளியீடு), இசை கவிதைகள் (சிவாஜி கணேசனின் முத்தங்கள்); இரண்டுமே ஏனோ திருப்தி தரவில்லை. இதற்கான காரணங்கள் வாசகனாக என்னுடைய தரப்பிலும் இருக்கலாம். கவிதைகளை வாசிக்கும்போது பற்றிக்கொள்ள ஏதுவாக காய்ந்த சருகாக இருப்பது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை; புற எதார்த்தங்களின் ஈரத்தால் ஊறிப்போயிருந்ததும் ஒரு காரணம்தான்.  உங்கள் கவிதைகளை இங்கு கடும் குளிர் காலத்தின் அதிகாலையில் என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வாகன நிறுத்தத்தில் அவன் உள்ளே செல்லக் காத்திருந்த பத்து நிமிட இடைவெளிக்குள் வாசித்தேன், மனச் சருகுகள் பற்றிக்கொண்டன; ஒரு நல்ல கவிதை நம்மை கணநேரம் எல்லாவற்றையும் துறந்து ஆழமாக சிந்திக்க வைத்துவிடுகிறது. மீண்டும் கவிதைகளை நோக்கி நம்மை நகர்த்தும் காரணியும் அதுதான். வாசக சாலை தினவு இதழில்களில் வந்த கவிதைகளில் இருந்த வாசிப்பு சாத்தியங்கள், பொருள் மயக்கம், துள்ளல், இனிமை என்று சில மணிநேரங்கள் மனதை மிகக் கூர்ம

எரி நட்சத்திரம் - சிறுகதை

Image
                                                         “ வானில் எரி நட்சத்திரம் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டு என் கண்களைக் கூர்ந்து நோக்கிய அவருக்கு அறுபதிலிருந்து எழுபது வயதுக்குள் இருக்கலாம். அகன்ற மார்பும் ஆறடியைத் தொடும் உயரமுமாக பொருட்களால் நிறைந்திருந்த தன்னுடைய நீண்ட வாகனத்தின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்தார். காருண்யமான கண்களும் முகச் சுருக்கங்கள் உணர்த்திய உலக ஞானமும் அவரை வசீகரமானவராகக் காட்டியது. வாகனத்தின் கண்ணாடியில் தெரிந்த உட்புறம் ‘பயணம்’ என்று வெகுளித்தனமாக உலகுக்கு அறிவித்துக்கொண்டிருந்தது. ஊதா நிற டெனிம் சட்டையை அதே நிற ஜீன்ஸ் பேன்டினுள் பொருத்தி சற்று வெளிறிய காவி நிற இடுப்புப் பட்டையும் அதே நிறத்தில் கௌபாய் பூட்சும் அணிந்திருந்தார். ஏப்ரல் மாத வசந்தகால முன் மதியம் தனகே உரிய பூரிப்புகளுடன் திழந்துகொண்டிருந்தது. சுகர் மேப்பிள் மரங்களின் வெளிற்பச்சை இலைகளிலிருந்து சிறு குருவிகளின் கொண்டாட்டமான உரையாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. “என்ன ஒரு அருமையான நாள்” என்று தொடங்கியது எங்கள் உரையாடல். அவருடைய வாகனத்தின் உடலில் அழகிய மலை ஒன்று வரையப்பட்டிருந்தது. நீண்ட