நெடும்பாதைகள், மிக்ஷிகன் கதை விவாதம்
அன்புள்ள நண்பர்களுக்கு, என்னுடைய கதையை வாசிக்க நேரம் அளித்தமைக்கு முதல் நன்றி. விவாதம் குறித்த பதிவை மதுநிகா பகிர்ந்திருந்தார். அதில் எழுந்த சில கேள்விகள், கருத்துகள் குறித்த என்னுடைய எண்ணங்களைப் பகிர்கிறேன். கதையின் முதல் வரி கதையின் முதல் வரியை அனைவருமே கூர்ந்து வாசித்திருக்கிறீர்கள். நான் இந்தக் கதையை சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி அப்படியே வைத்திருந்தேன், கதை என்னுள் எழ மறுத்தது. அன்னம்மாள் அந்தக் கடிகார ஒலியை எதிர்கொள்ளும் தருணத்தில் இருந்தே கதையை நான் முதலில் தொடங்கியிருந்தேன். இந்தக் கதையில் காலம் ஒரு கதாப்பாத்திரம் போலவே ஊடாடுகிறது. மேலும் கடிகாரம் காலத்துக்கான குறியீடு என்பது இலக்கிய வாசகர்கள் அனைவருக்குமே பரிச்சயமான ஒன்று என்பதால் அது சரியான தொடக்கமாக இருக்கும் என்றும் எண்ணினேன். ஆனால், அது மிகவும் சம்பிரதாயமான ஒர...